Saturday, June 4, 2011

யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் விசேட ஊடக அறிக்கை, மற்றும் பிரதிநிதிகள்கூட்ட அறிக்கை


இன்று சனிக்கிழமை 4 ஜூன் 2011 அன்று மீள்குடியேற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வுக்கூட்டம் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சுகுணாரதி தெய்வேந்திரம் தலைமையில் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் காலை 10.30 மணி முதல் மிகச்சிறப்பாக இடம்பெற்றது, இந்நிகழ்விற்கு நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டனர், இதன்போது யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அது சார்ந்து எழுகின்ற நடைமுரைப்பிரச்சினைகள் குறித்து மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. 

இங்கு கருத்து வெளியிட்ட பிரதேச செயலாளர் சுகுணாரதி தெய்வேந்திரம்: மீள்குடியேற்றம் ஒரு முறைதான் இடம்பெறும், அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்கள், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வேலைத்திட்டங்களை மக்களுக்குச் சென்றடையும் ஒரு பணியினைத்தான் நாம் மேற்கொள்கின்றோம், குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்களுடைய விடயத்தை எடுத்துக்கொண்டால் பதிவுகளை மேற்கொண்ட பலர் இங்கே நிரந்தரமாக குடியிருக்கவில்லை, அவர்கள் பலர் மீண்டும் தமது பழைய இடங்களுக்கு சென்றுவிட்டனர், எனவே நிவாரண நடவடிக்கைகளுக்கு இது பாதிப்பையேற்படுத்துகின்றது, ஒரு சிலர் இதனை தமது அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்துகின்றனர், அரசாங்கத்தின் மீள்குடியேற்ற நிகழ்ச்சித்திட்டம் எவ்வித அரசியல் சார்பும் அற்றது என்பதை மக்களுக்கு மிகத்தெளிவாக கூறிக்கொள்கின்றேன்.

உலக உணவுத்திட்டத்தின் உதவிகள்,யூ.என்.எச்.சீ,ஆர் உடைய உதவிகள், இப்போது வழங்கப்படும் கூறைத்தகடுகள் என்பன முறைகேடாகப் பாவிக்கப்பட்டதன் விளைவாகவே நிறுத்தப்பட்டன, நான் இங்கே அவ்வாறான முறைகேடுகளுக்கு காரணமான அரசியல்வாதியை பெயர் கூறி குறிப்பிட விரும்பவில்லை, எனவே மக்கள் எங்களுடன் ஒத்துழைத்தால் மீள்குடியேற்ற நிகழ்ச்சித்திட்டத்தை எமக்கு சீராக மேற்கொள்ள முடியும்.

தேவைகள் எல்லைகள் அற்றவை, வளங்களோ மட்டுப்படுத்தப்பட்டவை, அதிலும் அரச உதவிகள் மேலும் குறைவானவை எனவே உரியவருக்கு உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதில் நாம் கவனமாக செயற்படுகின்றோம், முதன்மைப்படுத்தல் அடிப்படையில் பட்டியல்களை நான் நேரடியாக களத்துக்கு விஜயம் மேற்கொண்டு தீர்மானிக்கின்றேன், இதனை ஒரு சிலர் விரும்புகிறார்கள் இல்லை, இதற்கு நான் எதுவும் செய்ய முடியாது, தேவையுள்ளவனுக்கு கொடுத்த பின்னரே அடுத்தவனுக்கு கிடைக்கும்.

புத்தளத்தில் வீட்டுத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இங்கே உதவிகள் வழங்கப்பட மாட்டாது என்பதை மக்களாகிய நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள், இது அரசாங்கத்தின் பொதுக்கொள்கையாகும். இப்போது ஒரு தொகுதி மக்களுக்கு கூறைத்தகடுகள் விநியோகிக்கப்பட்டன, அடுத்தடுத்த கட்டங்களில் ஏனையோருக்கும் வழங்கப்படும், ஆனால் இதனை ஒரு சிலர் தவறாகப் புரிந்துகொண்டு குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்.

கதீஜா மகாவித்தியாலயத்தில் தங்கியிருப்போருக்கு ஆரம்பத்தில் நாம் கூரைத்தகடுகளை வழங்கினோம், அவர்கள் அவ்வாறான நலன்புரி முகாம்களில் இருந்து வெளியேற வேண்டும், மீண்டும் முகாம் வாழ்க்கை தேவையில்லை என்றே நாம் அவ்வாறு செய்தோம் ஆனால் அவர்கள் இன்னும் அதே பாடசாலையில் இருக்கின்றார்கள், அவர்களுள் சிலருக்கு புத்தளத்திலும் வீடுகள் இருக்கின்றன என அறியக்கிடைக்கின்றது, இது ஆரோக்கியமான நிலைமை அல்ல.

மக்கள் சரியான உண்மையான தரவுகளை எமக்கு முன்வைத்தால், நாம் உதவித்திட்டங்களை வழங்குவது சீராக இருக்கும், இதற்கு மக்கள் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும், நாம் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்துடன் நெருங்கி கடமையாற்றுகின்றோம், அவர்கள் எங்களுடன் சுமூகமாக நடந்து கொள்கின்றார்கள்,உண்மையான தேவையுள்ள மக்களுக்கு நாம் உதவத் தயாராகவே இருக்கின்றோம். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு எமக்கு வேண்டும். எனக்குறிப்பிட்டார், 

காணிகள் இருப்போருக்கான வீட்டுத்திட்டத்தில் நான் பல  முஸ்லிம்களை நான் இணைத்துள்ளேன், வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தும்போது காணிகள் இருப்போருக்கு நான் முன்னுரிமை வழங்கி வீட்டுத்திட்டங்கள் அவர்களைச் சென்றடையச்செய்வேன். எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதன்பின்னர் பொது மக்களுக்கான கேள்விகளுக்கு நேரம் வழங்கப்பட்டது, 

அதன்போது பிரதேச செயலாளர் இனப்பாகுபாட்டுடன் நடந்துகொள்கின்றார் என்றும், முஸ்லிம்களைப் புறக்கணிக்கின்றார் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன, இவற்றை மறுத்த பிரதேச செயலாளர், குறுக்குவழிகளில் உதவிகளைப்பெற முயலும் பலரை நான் தடுத்துள்ளேன், எனவே அவர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை எம்மீது வைக்கின்றார்கள், நான் எல்லோரையும் சமமாகவே மதிக்கின்றேன், அவ்வாறு இனத்துவேசத்துடன் நடந்துகொண்டேன் என்பதற்கு ஒரு ஆதாராத்தையும் உங்களால் முன்வைக்க முடியாது.

வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்பட்டன, அப்போது கிராமிய மட்டத்திலான மீள் எழுச்சித்திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது, கிராமிய மட்டத்திலான வளவாளர்களை இனங்கண்டு அவர்களூடாக குறித்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் என்ற விடயம் பேசப்பட்டது, அதற்கு பிரதேச செயலாளர் உடனடியாக அதனை அமுல்படுத்துவதாக இணக்கம் தெரிவித்தார்.

மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும்படி பொறுத்தமற்ற கேள்விகள் சிலதை ஒரு சிலர் முன்வைத்தனர், அதற்கு பிரதேச செயலாளர், பதிலளிக்கவில்லை, இறுதியாக சம்மேளனப்பிரதிநிதிகள், பிரதேச செயலாளரிடம் சட்டத்தை விட மனிதாபிமான அடிப்படையில் எமது பிரச்சினைகளை அணுகி மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.இதனை பிரதேச செயலாளர் அங்கீகரித்தார், அத்துடன் பொதுக்கூட்டம் இனிதே துஆவுடன் முற்றுப்பெற்றது.

No comments:

Post a Comment