Tuesday, June 21, 2011

Hakeem's Speech at YMMA Convention

எம்.ஏ.எம்.நிலாம்  : போருக்குப் பின்னரான சூழ்நிலையில் சமூகம் எதிர்நோக்கும் சவால்களுக்கு முகம்கொடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் அரசாங்கத்தை மட்டும் எதிர்பார்த்திருக்க முடியாதெனவும் சமூக சேவை இயக்கங்களும் புத்திஜீவிகளும் இந்த விடயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் 61 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்று முன்தினம் ஞாயிறன்று கொழும்பு பட்டயக்கணக்காளர் நிறுவனக் கேட்போர் கூடத்தில் இந்த மாநாடு இடம்பெற்றது. நாட்டின் சகல பகுதிகளிலுமிருந்து வை.எம்.எம்.ஏ.கிளைகளின் பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இலங்கை சட்டமன்றத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; தூர நோக்கும், தூய போக்கும் கொண்ட மர்ஹும் அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் 1950 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வை.எம்.எம்.ஏ.என்ற இந்த இஸ்லாமிய வாலிபர் இயக்கம் நாடு பூராகவும் கிளைகளை அமைத்து வியாபித்துள்ளது. 1950 ஆம் ஆண்டுகளில் தேசியவாத அலை நாட்டில் பரவலாக வீசிய போது மிகவும் துணிச்சலுடன் சரியான தீர்மானத்தை சரியான நேரத்தில் மேற்கொள்வதில் அறிஞர் அஸீஸ் சிறந்து விளங்கினார். உத்தியோகபூர்வ மொழி என்ற விவகாரம் தலைதூக்கிய போது அறிஞர் அஸீஸ், முஸ்லிம்களை பொறுத்தவரை தாய்மொழியான தமிழைக் கற்பதிலேயே ஆர்வம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் பேரவை ஒரு சமூகம் சார்ந்த இயக்கமாக இருந்த போதிலும் நாட்டில் சகல இனங்களுக்குமிடையில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதில் முன்னின்று பணியாற்றி வருகின்றது. 1980 ஆம் ஆண்டுகளில் நாட்டில் வன்செயல்கள் இடம்பெற்றதோடு, ஆயுதப் பேராட்டமும் ஆரம்பமானது. அத்துடன் இந்திய, இலங்கை ஒப்பந்தமும் குறிப்பிடத்தக்க தாக்கத்தைச் செலுத்தியது.

இவற்றின் விளைவாக நாட்டில் அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்பில் தளம்பல் நிலைமை ஏற்பட்டது. இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்தது. இவ்வாறான சூழ்நிலையில் வை.எம்.எம்.ஏ.(முஸ்லிம் வாலிபர் பேரவை) போன்ற சமூகம் சார்ந்த அமைப்புகள் (இணிட்ட்தணடிtதூ ஆச்ண்ஞுஞீ Oணூஞ்ச்ணடித்ச்tடிணிணண்) நாட்டில் சுமுக நிலையை ஏற்படுத்துவதற்கும் அளப்பரிய பங்களிப்பைச் செய்துள்ளன.

வறுமை ஒழிப்பு, போதைப்பொருள் பாவனைக்கெதிரான செயல்திட்டங்கள், அனர்த்த நிவாரண உதவிகள் போன்றவற்றை முஸ்லிம் வாலிபர் பேரவை வெற்றிகரமாக முன்னெடுத்து வந்திருக்கின்றது. முஸ்லிம்களை பொறுத்தவரை துரதிஷ்டவசமாக சிந்தனை ரீதியான வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான பலவீனங்களை மேற்கு நாடுகள் சாதகமாக பயன்படுத்தி முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கின்றனர். இஸ்லாத்தில் வகுப்பு வாதம், பிரிவினை வாதம் என்பன இல்லை. அவ்வாறே மேற்கு நாடுகளில் கூறப்படுவது போல இஸ்லாத்தில் தீவிரவாதமும் இல்லை.

அண்மையில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்குச் சென்றிருந்த பொழுது இடம்பெயர்ந்த மக்கள் அனுபவிக்கும் இன்னல்களை நேரில் காண முடிந்தது. முல்லைத்தீவில் மீள்குடியேற முன்வந்துள்ள 400 முஸ்லிம் குடும்பங்கள் கழிவறை வசதிகள் கூட இன்றி, ஓலையால் வேயப்பட்டு, தகரத்தாலும் தார்போலினாலும் அமைக்கப்பட்ட தற்காலிக இருப்பிடங்களில் மின்சார வசதிகள் கூட இன்றி வாழ்ந்து வருவதைக் கண்டேன்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிரதேசங்களில் மீள்குடியேறியோரில் வயது முதிர்ந்தோர் குடிசைகளை அமைத்துக்கொண்டு, போர்வையால் போர்த்திக்கொண்டு இரவு வேளைகளில் யானைகளிலிருந்தும் ஏனைய வனவிலங்குகளிலிருந்தும் பயிர்ச்செய்கையை பாதுகாத்துக் கொள்ள காவலிருப்பதையும் கண்டேன்.

பாதிக்கப்பட்ட இவ்வாறான மக்களுக்கு உதவ சமூகம் சார்ந்த இயக்கங்கள் முன்வருமானால் பெரிதும் வரவேற்கத்தக்கது.மத்திய கொழும்பில் நகர அபிவிருத்திக்காக சேரிப்புறங்களில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்படுவது பிரச்சினையைத் தோற்றுவித்திருக்கிறது. அது பற்றி ஒரு தவறான பார்வையிருக்கிறது. இது தொடர்பாக நான் அண்மையில் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்து கலந்துரையாடினேன். இதனால் மக்கள் பீதியடைந்திருப்பதாகவும் இவ்வாறான செயல்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்பதாக சம்பந்தப்பட்ட மக்களுக்கு அவை பற்றிய போதிய தெளிவும் விளக்கமும் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவரிடம் நான் எடுத்துரைத்தேன். எனது வேண்டுகோளை அவர் கவனமாக செவிமடுத்தார்.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும். அவர்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் ஒழுக்கம் சார்ந்த விடயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

No comments:

Post a Comment