Sunday, September 25, 2011

யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றத்தின் தடைகள் குறித்த கவனயீர்ப்பு பிரேரணை

யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றத்தின் தடைகள் குறித்த கவனயீர்ப்பு பிரேரணை
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!
கௌரவ மாநகர முதல்வர் மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் வந்தனங்கள்,
வரலாற்றின் ஆரம்பகாலம்தொட்டு யாழ்ப்பாண மண்ணுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் மிகநெருக்கமான உறவு காணப்படுகின்றது, யாழ்ப்பாண மண்ணின் கலாசாரத்தோடும், தமிழ் மொழியுடனும், அரசியலோடும், பொருளாதாரத்தோடும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு மிக இறுக்கமான பிணைப்பும் உறவும் இருந்துவருகின்றது, ஒருதாய் மக்களாகவே இங்கு வாழ்கின்ற இந்துக்களும், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கணிக்கப்படுகின்றார்கள்.
வரலாற்றில் அவ்வப்போது எழுந்த இன த்துவ உணர்வுகளும், ஆதிக்க எண்ணங்களும் யாழ்ப்பாணத்தின் ஏனைய இனங்களை, சாதிய சமூகங்களைப் பாதித்ததைப்போலவே முஸ்லிம் சமூகத்தையும் பாதித்திருப்பதோடு இடப்பெயர்வுகளையும் உண்டுபண்ணியிருக்கின்றது, இருப்பினும் அவையெதுவும் ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக அடையாளப்படுத்தப்படவில்லை, அனால் 1990களில் எழுந்த ஆயுதப் பலத்துடன் கூடிய அதிகாரமும், இனத்துவ உணர்வின் அதி உச்ச நிலையும் யாழ்ப்பாண முஸ்லிம்களை என்றுமே மறக்க முடியாத ஒரு இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கியது. அதன் விளைவாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது சொந்த நாட்டிலேயே அகதியாக்கப்பட்டார்கள்,
இரண்டு மணித்தியாலயத்தில் ஆயுத முனையில் பலவந்தமாக முஸ்லிம்கள் அவர்களது தாய் மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள், அப்போது, அத்தகைய மிலேச்சனத்தை எதிர்த்த நல்ல தமிழ் உள்ளங்களையும் இந்த இடத்தில் நாம் மறந்துவிடவில்லை, கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளியேற்றப்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்களுடன் நல்லுறவைப்பேணியது மட்டுமல்ல, முக்கிய அரசியல் தலைமைகள் பல  வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் விடயத்தில் மௌனம் காத்த வேளையில் புலிகளின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது முஸ்லிம்களின் வெளியேற்றத்தை கடுமையாக எதிர்த்து கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்கள், இடம்பெயர்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கென தேவாபாத் என்னும் மீள்குடியேற்றக்கிராமத்தையும் அமைத்துக்கொடுத்தமை முஸ்லிம்களின் விவகாரத்தில் அவருக்கிருந்த தொப்புள்கொடி உறவை உணர்த்தப்போதுமானதாகும்.
அதுமாத்திரமல்ல தமிழர் விடுதலைக்கூட்டமைப்பும் முஸ்லிம்களை தமது சகோதரர்களாகவே மதித்தார்கள்,யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றில் அவர்களில் இருந்தே ஒருவரை பாராளுமன்றப் பிரதிநிதியாக்கிய பெருமை தமிழர் விடுதலைக்கூட்டமைப்புக்கு இருக்கின்றது.
அத்தகைய பல  நல்ல உள்ளங்களை நாம் என்றும் நன்றியுடன் நினைவு கூர்கின்றோம்,
இவ்வாறான ஒரு வெளியேற்றம் எமது மக்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கியது, இருபதுவருட அகதிவாழ்வு அவர்களின் வாழ்வில் பல்வேறு தாக்கங்களையும் மாறுதல்களையும் உண்டுபண்ணியது.தமது சுயம்தொலைத்து அங்கலாய்த்தவர்களாய், இருப்பற்றவர்களாய் நாம் அகதிகளாய் இருந்தோம், அப்போது எவ்வாறு திடீரென வெளியேற்றம் எம்மீது திணிக்கப்பட்டதோ அதேபோன்று மீள்குடியேற்றமும் நாம் எதிர்பார்க்காத சூழலில் திடீரென எம்ம்முன் வந்தது, 2009இல் முடிவுக்கு வந்த இனத்துவப்போராட்டத்தின் ஆயுதவடிவம் இந்த நாட்டிலே சமாதான சூழலை அமைதியை ஏற்படுத்த வழிசெய்தது.
எமது மக்களும் புத்துயிர்பெற்று, புதிய நம்பிக்கைகளை சுமந்தவர்களாக தமது தாய்மண்ணை பாசத்தோடு திரும்பிப்பார்த்தார்கள், மீள்குடியேற்றம் குறித்து சிந்தித்தார்கள், மிகுந்த கஷ்டத்தோடு பல்வேறு தியாகங்களுடன் அவர்கள் ஏற்படுத்திய தற்காலிக இருப்பிடங்கள், தற்காலிக எதிர்பார்ப்புக்களை ஒருபுறம் வைத்துவிட்டு தமது தாய்மண்ணில் தமது புதிய வாழ்வை ஏற்படுத்தும் எண்ணத்துடனும், வரவேற்கும் தமிழ் உறவுகளை எதிர்பார்த்தும் தமது தாய் மண்ணை நோக்கி அவர்கள் மீண்டும் வந்தார்கள்.
கௌரவ முதல்வர் அவர்களும், எமது மதிப்பிற்குரிய அரச அதிபர் அவர்களும் எமது மக்களின் நிலையினை சீராக உணர்ந்து அதற்கேற்ற வகையிலே அரச இயந்திரத்தை ஒழுங்கமைத்து, எமது மக்களின் கண்ணீரையும் துயரத்தையும் துன்பத்தையும் உணர்ந்து அவர்களுக்கான மீள்குடியேற்ற நிகழ்ச்சித்திட்டத்தை ஒழுங்கமைக்க முனவந்தார்கள், இதனை நாம் மிகுந்த நன்றியுணர்வோடு நோக்குகின்றோம், அவர்களுடன் எப்போதுமே நாம் ஒத்துழைப்புடன் செயற்படுவோம். என்பதை இந்த சபையில் நாங்கள் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்,
எனினும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் இன்னும் தடைகள் இருப்பதாகவே நாம் உணருகின்றோம்,
அவர்களுக்கு இருப்பிடங்கள் இல்லையென்பதும், காணியற்றோர் அதிகமாக இருக்கின்றார்கள் என்பதும், தொழில்வாய்ப்புகள் இல்லையென்பதும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்படவேண்டும் என்பதும் அவர்களுக்கு இருக்கும் மிக முக்கிய சவால்கள் என நாம் அடையாளப்படுத்த முடியும் ஆனால் எமது மக்கள் இவற்றையெல்லாம் விட இன்னுமொரு முக்கிய சவால் இருப்பதாகவே உணருகின்றார்கள், அதனை அவர்கள் தினம் தினம் அனுபவிக்கின்றார்கள், அதனால் விரக்தியுருகின்றார்கள், ஒருவித அச்ச நிலைக்கும் சந்தேக நிலைக்கும் அவர்கள் உட்படுகின்றார்கள்.தமது தாய் மண்ணில் மீளவும் குடியேறும் வாய்ப்பு இல்லாமலாக்கப்படுமோ என்ற அச்சம் அவர்களை சூழ்ந்துகொண்டுள்ளது.
யாழ் முஸ்லிம் சமூகத்திற்கிருக்கின்ற மிக உச்ச அரசியல் பலத்தைக்கொண்டே இந்த சபைக்கு நாம் அனுப்பப்பட்டிருக்கின்றோம், அந்த மக்களின் பிரச்சினைகளை இந்த சபையிலேயே எம்மால் முன்வைக்க முடியும், இங்கிருந்துகொண்டே உயர் சபைகளுக்கு நாம் ஒரு அழுத்ததைக் கொடுக்க முயற்சிக்கின்றோம்,
யாழ்ப்பாணம் பிரதேச செயலாளரின் ஒருசில நடவடிக்கைகளும் அணுகுமுறைகளும் மீளவும் ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எமக்கு இருக்கின்றது, 'நீங்கள் இங்கே வரவேண்டாம்' என்ற வார்த்தைகள் எமது மக்களை நோக்கி நேரடியாக பல சந்தர்ப்பங்களில் பிரயோக்கிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமல்லாது கடுமையான சட்ட அமுலாக்கங்களின் மூலமாக எமது மக்களை விரக்தியுறச்செய்து அதனடியாக அவர்கள் மீள்குடியேற்றத்தை வெறுக்கின்ற நிலையை அவர் ஏற்படுத்த முயற்சிக்கின்றார் என்பதை நாம் தெளிவாக உணருகின்றோம்.
எமக்கான நிவாரணங்களை இழுத்தடிப்புச்செய்து, உலக உணவுத்திட்ட உதவிகளை தாமதிக்கச்செய்து, யூ.என்.எச்.சீ.ஆர் அமைப்பின் மீளக்குடியேறியோர்க்கான உதவிகளை இல்லாமலாக்கி, வீட்டுத்திட்டங்களை இழுத்தடிப்புச்செய்து, எமது சொந்தக்காணிகளையே எமக்கு பகிர்ந்தளிக்கவோ பாவிக்கவோ இடங்கொடாது எமது நிறுவனங்களை இயங்காது தடுத்து, சாட்டுப்போக்குகள் கூறி, எமது மக்களின் மீள்குடியேற்றத்தை சூனியமாக்க எமது பிரதேச செயலாளர் எத்தனிக்கின்றார் என்பதுவே எமது மக்களின் பரவலான கணிப்பு,
எனவே குறித்த பிரதேச செயலாளரின் மீது நீதியின் பார்வை உடனடியாக திருப்பபடவேண்டும், அதுமட்டுமல்ல அவரது போக்கில் மாற்றம் உடனடியாக ஏற்படுத்தப்படவேண்டும் அல்லது அவர் மாற்றப்படவேண்டும் என்பது எமது உடனடி எதிர்பார்ப்பாகும், அதனை இந்த நிறைவேற்ற இந்த சபைக்கு அதிகாரம் இல்லை என்பது எமக்குத்தெரியும் இருப்பினும் அரச கவனத்திற்கு இவ்விடயம் உடனடியாக கொண்டுவரப்படவேண்டும் என்பதோடு, இதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும், அதற்கான மிக அடிமட்ட அழுத்தத்தை எமத்து சக்திக்கு உட்பட்டு இந்த சபையிலே ஏற்படுத்துவதே எமது இந்த பிரேரணையின் நோக்கமாகும்.
பிரதேச செயலாளரின் நிலைகளில், அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்
முஸ்லிம்களின் விவகாரங்களுக்கென முஸ்லிம் கிராம உத்தியோகத்தர் நியமிக்கப்படவேண்டும்
மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கென தனியான கொள்கைகள் அமுலாக்கப்படவேண்டும்
என்ற மூன்று கோரிக்கைகளை இந்த சபையிலே முன்வைக்கின்றேம், அதற்கான அழுத்தத்தை அரசுக்கு இந்த சபை வழங்கவேண்டும் என்பதும், அதுவரை சபை நடவடிக்கைகளை முஸ்லிம் மாநகர சபை உறுப்பினர்களாகிய நாம் பகிர்ஷ்கரிக்கின்றோம், என்பதை இவ்விடத்தில் சபையில் தெரிவித்து சபை நடவடிக்கைகளிலிருந்த நாம் வெளியேறுகின்றோம். நன்றி.

No comments:

Post a Comment