Monday, April 25, 2011

இணங்கி வராவிட்டால் ஐ.நாவில் இலங்கையை கைவிடும் இந்தியா: நெருக்கடிக்குள் கொழும்பு


தமிழர்களுடனான பிரச்சினைக்கு விரைந்து அரசியல் தீர்வு காணுதல் மற்றும் சீனாவுடனான உறவு ஆகிய விவகாரங்களில் தமது போக்குக்குக் கொழும்பு இணங்கி வராவிட்டால், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் போர்க் குற்ற அறிக்கை விவகாரத்தில் உதவமுடியாத நிலையை இலங்கையைக் கைவிடும் நிலையை புதுடில்லி எடுக்கும் என்ற எச்சரிக்கை கொழும்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இலங்கையிலிருந்து உயர் மட்டக் குழு புதுடில்லி வருவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா நிராகரித்துள்ளது. போர்க் காலத்தில் இந்திய  இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட, அமைச்சர் பஸில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகி யோர் அடங்கிய உயர் மட்டக் குழுவுக்கே உடனடியாகப் புதுடில்லி வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மே மாத இறுதிவரை இலங்கைக் குழுவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கமுடியாது என்று புதுடில்லி ஆணித்தரமாகக் கூறிவிட்டது என்று இங்கு புதுடில்லியில் ராஜதந்திரிகள் தெரிவித்தனர்.            
  
நிபுணர் குழுவின் போர்க்குற்ற அறிக்கை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அல்லது மனிதஉரிமைகள் சபையில் விவாதத்துக்குக் கொண்டுவரப்படலாம் என்ற நிலைமை இருப்பதால், இந்த விடயத்தில் இந்தியாவின் ஆலோசனையையும் உதவியையும் பெறுவதற்காகவே இலங்கைக்குழுவை இந்தியாவுக்கு அனுப்ப ஜனாதிபதி முடிவு செய்திருந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இலங்கை நடந்துகொண்ட விதம் மற்றும் ஏற்கனவே புதுடில்லிக்கு வழக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கொழும்பு தவறி இருப்பது ஆகியவற்றால் ஐ.நா. விவகாரத்தில் இலங்கைக்கு உடனடியாக எந்த உதவிகளையும் வழங்குவதில்லை என்ற முடிவை புதுடில்லி எடுத்திருப்பதாக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாகத் தமிழர்களுடனான பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்படும் என்று போருக்கு முன்னர் வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்ற கொழும்பு தவறியிருப்பதால் புதுடில்லித் தலைமை விசனம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது. எனவே ஐ.நா. விடயத்தை கொழும்பு மீது அழுத்தம் கொடுப்பதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்த இந்திய ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர் என்று அந்த இராஜதந்திரி மேலும் தெரிவித்தார். இந்த விடயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் புதுடில்லி செய்திகள் கூறுகின்றன. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்ட ஒரு சில தினங்களில் அது தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன், ஜனாதிபதி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து அவருக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

போர் முடிந்த பின்னர் உடனடியாக ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்று தமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி நிறை வேற்றப்படவில்லை, போரின் பின்னர் தமிழர் பகுதிகளை மீளக் கட்டியெழுப்பும் நோக்கோடு இந்தியாவால் ஆரம்பிக்கப் பட்ட திட்டங்களுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பது, குறிப்பாக 50,000 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் மற்றும் கிழக்கில் நுரைச்சோலைத் திட்டம், கொழும்பு  தூத்துக்குடி படகுச் சேவை என்பவற்றைத் தாமதப்படுத்துவது என்று இந்தியாவுக்கு எதிரான போக்கையே கொழும்பு மேற்கொண்டிருக்கும் போது எப்படி புதுடில்லியால் தொடர்ந்தும் சர்வதேச அரங்கில் இலங்கையைப் பாதுகாக்க முடியும் என்று இந்தியப் பிரதமர் அந்தச்சந்தர்ப்பத்தில் கேள்வி எழுப்பினார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியப் பிரதமருடனான பேச்சில் சாதகமான சமிக்ஞை கிடைக்காததை அடுத்து, புதுடில்லிக்கு உயர்மட்டக் குழுவை அனுப்பி நிலைமையைச் சமாளிப்பதற்கு ஜனாதிபதி முயற்சி எடுத்துள்ளார். ஆனால் அதற்கும் இந்தியா சாதகமான சமிக்ஞை காட்டவில்லை. மே மாத இறுதிவரைக்கும் இலங்கைக் குழுவைச் சந்திக்க நேரமில்லை என்று தெரிவித்துவிட்டது இந்தியா. வன்னியில் போர் தீவிரமாக நடைபெற்ற காலத்தில் மனித உரிமை விவகாரங்களைக் காட்டி கொழும்பு மீது அழுத்தங்கள் கொடுக்கப்படுவதை இந்தியா தடுத்து வந்தது. இரண்டு முக்கிய காரணங்களுக்காக இந்தியா இந்த இராஜதந்திர உதவிகளை கொழும்புக்கு வழங்கியது. முதலாவது விடுதலைப்புலிகள் இயக்கத்தை போராட்டக்களத்தில் இருந்து அகற்றுவது; இரண்டாவது புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் உடனடியாக தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காணப்படும் என்ற கொழும்பின் உறுதி மொழி. ஆனால் போர் முடிவடைந்து இரண்டு வருடங்களாகிவிட்ட போதும் அரசியல் தீர்வு ஒன்று காண்பதற்கான முயற்சிகளை கொழும்பு அரசு எடுக்கவில்லை. அது தொடர்பில் புதுடில்லி அழுத்தங்களைக் கொடுக்கும் போதெல்லாம் வெவ்வேறான காரணங்களைக் சொல்லி இலங்கை தட்டிக்கழித்து வந்தது. 

அதேசமயம் போரைக் காரணம் காட்டி சீனாவுடன் உறவுகளை வளர்த்துக் கொண்ட இலங்கை, போர் முடிவடைந்த பின்னரும் சீனாவுடனான உறவுகளை மேலும் பலப்படுத்தி வருகிறது. இது எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற அச்சம் புதுடில்லி மூலோபாய வகுப்பாளர்களிடம் ஏற்பட்டள்ளது. இந்தயா இந்த அச்சத்தை கொழும்பிடம் வெளிப்படுத்தும் போதெல்லாம், இந்தியாவை மீறி எதுவும் செய்யமாட்டோம் என்று கூறிச் சமாளிக்கும் போக்கையே கொழும்பு கொண்டிருக்கிறது. இந்தப் போக்கு ஆபத்தானது என்று கருதும் புதுடில்லி மூலோபாய வகுப்பாளர்கள் அதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இப்போது கருதுகிறார்கள்.
உதயன் 25 ஏப்ரல் 2011

No comments:

Post a Comment