06.05.2011 - வெள்ளிக்கிழமை
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்துடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலுடனும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி அவர்கள் தெரிவித்தார்.
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் (6) நடைபெற்ற உள்ளூர் சேவை மேம்பாட்டுத் திட்ட அமுலாக்கல் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நெல்சிப் திட்டத்தின் கீழ் மாகாண சபைக்கூடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இதற்காக அரசாங்கம் அதிகளவான நிதியினையும் செலவிட்டு வருகின்றது.
இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு மக்களது ஒத்துழைப்பும், ஒத்தாசையும் அவசியமானது என்பதுடன் யாழ் மாவட்டத்தில் நெல்சிப் திட்டத்தின் மூலம் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கூடாக தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் 34 வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் சகல பிரதேச சபைகளும் ஒருங்கிணைந்து தமக்கான பணிகளை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் சிறந்த தலைமைத்துவத்துடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலுடனும் வடக்கின் வசந்தம் ஊடாக யாழ் மாவட்ட மக்களுக்கான பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் ஆளுநர் இதன்போது சுட்டிக் காட்டினார்.
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் உள்ளூராட்சி ஆணையாளர் ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஷ் வடமாகாண பிரதம செயலாளர் சிவசுவாமி ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு சிறப்புரையாற்றும் போது உலக வங்கியிடமிருந்து இலங்கை அரசு கடன்பெற்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் திட்டமே நெல்சிப் திட்டம் எனவும் இதன் பிரகாரம் வடமாகாணத்தில் 42 வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் முகமாக 3626.44 மில்லியன் ரூபாவை அரசு நன்கொடை அடிப்படையில் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அதில் முதற்கட்டமாக 1084 மில்லியன் ரூபாவுக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மிகுதித் தொகை கட்டம் கட்டமாக கிடைக்கும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.
அரங்கில் ஆளுநர் மற்றும் அமைச்சர் ஆகியோர் மலர்மாலை அணிவிக்கபட்டும் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து உள்ளூராட்சி சபைகளுக்கூடாக நெல்சிப் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் உப கருத்திட்டங்களை செயற்படுத்துவதற்கான உறுதிப் பத்திரங்களை துறைசார்ந்தோருக்கு அமைச்சர் ஆளுநர் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சிவசுவாமி வடமாகாண ஆளுநரின் செயலாளர் ரங்கராஜா யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment