Monday, May 9, 2011

இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் கோரிக்கைகளை யாழ் பிரதேச செயலாளர் அமைச்சருக்கு விளக்கிக்க்கூறினார், அதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார், இனிவரும் காலங்களில் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் யாழ் பிரதேச அபிவிருத்திக்குழுவில் நிரந்தர அங்கத்துவத்தை வகிக்கும் என்றும் பிரதேச செயலாளர் இவ்விடத்தில் சுட்டிக்காட்டினார்,
யாழ் பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில் நிதிஒதுக்கீடு செய்யும் போது அதை சரியான முறையிலும் மக்களுக்கு பயன்படும் வகையிலும் பயன்படுத்தப்பட வேண்டும். காணியில்லாதவர்களுக்கு அரச  காணிகள் மற்றும் கோயில் காணிகள் உள்ளிட்ட பொதுவான காணிகளை பகிர்ந்தளிக்கப்படுவதற்கேற்ற நடவடிக்கைகள் துறைசார்ந்தோர் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன் யாழ் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மீள்குடியமர்ந்த மக்களுக்கு யு.என்.எச்.சி.ஆர். நிறுவனம் மூலமாக வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபா இதுவரையில் கிடைக்கப்பெறாதவர்களுக்கு கிடைக்கவும் வழிசமைக்கப்படும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

வீட்டுத்திட்ட நடைமுறைகள் அரசின் கொள்கைத் திட்டங்களுக்கேற்பவே முன்னெடுக்கப்படுமெனவும் அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் விகிதாசாரத்தை கருத்தில் கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவித்த அமைச்சர் அவர்கள் மேலதிகமாக செயற்பட வேண்டிய வடிகால் சீரமைப்புக்கு விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்படுமெனவும் தெரிவித்தார். அத்துடன் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மீளக்குடியமர்த்துவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் இதன்போது அமைச்சர் அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார்.

இன்றைய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மீள்எழுச்சித்திட்டம் ஆளுமை விருத்தி செயற்பாட்டுத்திட்டம் உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரம் காசுக்கான வேலைத்திட்டம் வீட்டுத்திட்டம் வீதி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டன. இதில் ஈ,பி.டி.பி. பாரர்ளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ் பிரதேச செயலர் சுகுணரதி தெய்வேந்திரம் ஆகியோர் கலந்து கொண்டதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் சரவணபவன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

No comments:

Post a Comment